35ஏ சட்டப்பிரிவை நீக்குவது பிரிவினைவாதிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்தான் பிரச்னையாக உள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்தான் 35ஏ சட்டப்பிரிவை நீக்குவது ஒரு பிரச்னையாக
புதுதில்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்தான் 35ஏ சட்டப்பிரிவை நீக்குவது ஒரு பிரச்னையாக உள்ளது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவியது. எனவே, 1954-ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 370க்கு ஏற்ப, 35ஏ என்ற பிரிவு 1954-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சட்டத்தில் 35ஏ பிரிவை சேர்ப்பதற்கு உத்தரவிட்டார். இந்த அரசியல் சாசன பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதற்கான வரையறையை உருவாக்கும் அதிகாரத்தை அம்மாநில சட்டப்பேரவைக்கு அளிக்கிறது.
இந்த சட்டப்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கிறது. காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாது. பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில், அசையாச் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ, நிரந்தரமாக குடியேறவோ அல்லது அரசாங்க வேலைகள் பெறவோ முடியாது. இதனை எதிர்த்து அரசு சார்பாற்ற 'வி தி சிட்டிசன்ஸ்' என்ற அமைப்பு, உட்பட 30க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Advertisement
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 35ஏ சட்டம் பெண்களுக்கும் கூட எதிரானது. இந்த சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள், தீவிரவாத சக்திகளின் தூண்டுதலில் செயல்படுவது தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் அனுமதிக்காது.
இந்த 35ஏ சட்டப்பிரிவு என்பது பெண்களுக்கு முற்றிலும் எதிரானது. அது மட்டுமில்லை, அரசியலமைப்புக்கும் எதிரானது. எனவே இதை உச்சநீதிமன்றமே ரத்துசெய்வதை பார்க்கத்தான் போகிறோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்தான் 35ஏ சட்டப்பிரிவை நீக்குவது ஒரு பிரச்னையாக உள்ளது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.