சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து காவேரி மருத்துவமனை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து அவருக்கு 11ஆவது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து காவேரி மருத்துவமனை முன் நேற்று மாலை முதல் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிய பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை அடுத்து காவேரி மருத்துவமனையை சுற்றிலும் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனை பகுதியில் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்