கேரளாவில் வெள்ளத்தில் பாஸ்போர்ட்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட்: சுஷ்மா அறிவிப்பு
கேரளாவில் மாநிலத்தில் வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமானோருக்கு புதிய மாற்று பாஸ்போர்ட்கள் இலவசமாக வழங்கப்படும் என
புதுதில்லி: கேரளாவில் மாநிலத்தில் வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமானோருக்கு புதிய மாற்று பாஸ்போர்ட்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் அதனால் உண்டான நிலச்சரிவின் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரும் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.
Advertisement
வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தோருக்கும் தலா ரூ.4 லட்சமும், நிலச்சரிவால் வீட்டோடு சேர்த்து நிலமும் சேதமடைந்த நபர்களுக்கு, புதிதாக நிலம் வாங்குவதற்கு தலா ரூ.6 லட்சம், வீடு கட்டுவதற்கு தலா ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் முக்கிய ஆவணங்களை இழந்தவர்கள் எவ்வித செலவும் இன்றி புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடு திரும்புகையில் ரூ.3,800 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமானோருக்கு புதிய மாற்று பாஸ்போர்ட்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
‘கேரள மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு நிலைமை சீரடைந்ததும் வெள்ளநீரில் நனைந்து சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக புதிய மாற்று பாஸ்போர்ட்கள் இலவசமாக வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
தேவை உடையவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் அருகாமையில் உள்ள தொடர்புடைய பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.