மதுரை: நாட்டின் சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் என வாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை, களஞ்சியம் எனும் பெயரில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிராமப் பெண்களிடையே சிறு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் சின்னப்பிள்ளைக்கு "ஸ்ரீ ஸ்த்ரீ சக்தி புரஷ்கார்" விருது வழங்கப்பட்டது.
மதுரையில் நடைபெற்ற விழாவில் விருதை வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ந்து போன சின்னப்பிள்ளை, வாஜ்பாயின் காலில் விழுந்து தானும் ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து சின்னப்பிள்ளை நாடு முழுவதும் பிரபவலம் ஆனார்.
இந்நிலையில், வாஜ்பாயின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், சிறந்த தலைவரை இழந்துவிட்டோம் என சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் விருதை நான் பெற்றபோது நாட்டுக்கே பிரதமரான அவர் எனது காலில் விழுந்ததை நினைக்கும் போது இப்போதும் எனது மனம் பதைபதைக்கிறது. அவர் காலமானர் என்ற செய்தி கேட்டு மனமுடைந்தேன். சிறந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரை போன்ற ஒரு தலைவர் இனி நாட்டுக்கு கிடைக்க போவதில்லை. அவரது மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி அறிந்து அவரை பார்க்க வேண்டும் என்று மனம் எண்ணியது. ஆனால், எனக்கும் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் பார்க்க இயலவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.