சென்னை: அதிமுக கட்சியையும், ஆட்சியையும் யாராலும் உடைக்கவோ, தொட்டுக் கூட பார்க்க முடியாது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வ ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற பெயரில் நாளிதழும் வெளியிடப்பட்டது. அந்த நாளிதழையும் இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர். ஜெயலலிதா சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதல்வர் பழனிசாமி, தங்க மோதிரம் அணிவித்து கெளரவித்தார்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. அவர் தனது அரசியல் பயணத்தில் வந்த தடைகளை எல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு வெற்றி கண்டவர். அவர் வெற்றிக்கண்ட அந்த இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார். சாதாரண அடிமட்டத் தொண்டன்கூட இந்த இயக்கத்தில் உயர் பொறுப்புக்கு வர முடியும். அவர் மறைந்தாலும் நம் இதயங்களில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இந்த கட்சியையும், அதிமுக ஆட்சியையும் யாராலும் உடைக்க முடியாது. சிலர் சதி செய்தபோதும் கட்சியையும் ஆட்சியையும் உடைக்க முடியவில்லை. ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம் என்றவர் எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கூறினார்.