சென்னை: பிரபல எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்ட ஞாநி சங்கரன்(63) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார்.
அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
ஞாநியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஞாநியின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.
ஆங்கில பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஞாநி சங்கரன். 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர் ஞாநி. தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர்.
1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி.
பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார். 2014-ஆம் ஆண்டு ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் தீவிர அரசியலை கைவிட்டார். சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாநியின் உடலுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழா குறித்து தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது கடைசி முகநூல் பதிவு பல சிந்தனைகளை தூண்டுவதாக உள்ளது.
பதிவில், துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பாஜக நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பாஜகவையும் லேசாக கிண்டல் செய்வார்.
குருமூர்த்தி முழுக்க முழுக்க பாஜத சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது.
முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும். எத்தனை நிதர்சனமான உண்மை என்று பதிவிட்டுள்ளார்.