நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி: மறு சீராய்வு மனு தள்ளுபடி
தில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட
புதுதில்லி: தில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்ததுடன், 3 குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
தில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ததுடன், 3 குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
தில்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவப் படிப்பு மாணவி 'நிர்பயா' கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Advertisement
இந்த விவகாரத்தில் முகேஷ் (29), பவன் குமார் குப்தா (22), வினய் சர்மா (23), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வினய் சர்மாவும், பவன் குமார் குப்தாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 4-ஆம் தேதி ஒத்திவைத்தது.
மேலும், தில்லி காவல் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சிங் ஆகியோரை தீர்ப்பு தொடர்பாக மே 10-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மற்றொரு குற்றவாளியான முகேஷ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ராம் சிங், தில்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் தொடர்புடைய சிறார் குற்றவாளி ஒருவர், கூர்நோக்கு இல்லத்திலிருந்து 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 'நிர்பயா' வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று திங்கள்கிழமை (ஜூலை 9) பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் கிடையாது என்றும் குற்றவாளிகள் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ததுடன், வினய்சர்மா, பவன் குப்தா, முகேஷ்சிங் ஆகிய 3 பேரின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்திருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.