பட்டமளிப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என மனிதவள
புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.
ஆனால், ஒரு சில பல்கலைக்கழகங்கள் நிதி மற்றும் நேர பற்றாக்குறையை காரணம் காட்டி தொடர்ச்சியாக பட்டமளிப்பு விழாவை தவிர்த்து வருவதாக தெரிகிறது.
Advertisement
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆண்டு தோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்து உள்ளது.
இது பற்றி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பட்டமளிப்பு விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக நடத்த வேண்டும். இது பட்டதாரி மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு பெருமை தரக்கூடிய தருணமாகும்” என்று தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழகங்களும் இறுதியாக நடத்திய பட்டமளிப்பு விழா குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறும் அமைச்சகம் கேட்டுள்ளது.
உதாரணமாக, மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்தியது. திரிபுராவின் மத்திய பல்கலைக்கழகம் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடத்தி உள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் 46 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஆண்டு இரண்டாவது பட்டமளிப்பு கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.