புதுதில்லி: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், இனி பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான இயல்புநிலை அளவீட்டை 24 டிகிரி செல்சியசாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் ஆர்.கே.சிங் பேசுகையில், குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏசி) ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் உயர்த்தும்போது, 6 சதவீத மின்சாரம் சேமிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதாரணமாக மனித உடல் வெப்பநிலை சுமார் 36-37 டிகிரி செல்சியல். ஆனால், ஓட்டல்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியின் தற்போதைய வெப்பநிலை 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவீடாக உள்ளது. இது உண்மையிலே ஆரோக்கியமற்றதாக உள்ளதால் இதனை 24 டிகிரி செல்சியசாக அதிகரிக்க வேண்டும்.
18 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் மக்கள் சூடான ஆடைகளையோ அல்லது போர்வைகளை பயன்படுத்துவதால், உண்மையில் ஆற்றல் வீண்ணடிக்கப்படுகிறது.
ஜப்பான் போன்ற நாடுகளில் வடிவமைக்கப்படும் குளிர்சாதனப் பெட்டிகளின் இயல்பு நிலை 28 டிகிரி செல்சியசாக வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. மின்சாரத்தைச் சேமிக்க இதுபோன்ற முயற்சிகளை பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருவதால், இந்தியாவிலும் மின்சாரம் சேமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து குளிர்சாதனப் பெட்டி உற்பத்தியாளர்களுடன் மின்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, வரும் காலங்களில் நிதி மற்றும் சுகாதார நலன்களில் இருந்தும் நுகர்வோர் நலன்களுக்கு உகந்த வெப்ப நிலையில், 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலான இயல்புநிலை அளவீடு கொண்டதாக குளிர்சாதனப் பெட்டிகளை உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லா நிறுவனங்களின் உற்பத்தியாளர்களுக்கும் இதுகுறித்த அறிவுரை வழங்கப்படும்.
இந்த நடைமுறை குறித்து மக்களிடம் நான்கு அல்லது ஆறு மாதங்களில் விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தப்படும். அதன்பின்னர், கருத்துகளைச் சேகரித்து அமைச்சகம் பரிசீலிக்கும்' என்றும் புதிய பிரசாரம் கணிசமான மின் சேமிப்பை விளைவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
அனைத்து நுகர்வோரும் ஏற்றுக்கொண்டால், ஆண்டுக்கு 20 பில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கலாம் என மின் அமைச்சக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.