புதுதில்லி: தலைநகர் தில்லியில் ஒவ்வொரு நாளும் 5 பெண்களுக்கு மேற்பட்டோர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 96.63 சதவீதம் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இருப்பினும் அங்கு பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தே வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை.
இதுகுறித்து தில்லி போலீஸார் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு ஆண்டின் (2018) முதல் மூன்றரை (3.5) மாதங்களில் மட்டும் தினமும் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த மாதம் 15-ஆம் தேதி வரை 578 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு 563 கற்பழிப்பு வழக்குள் பதிவாகி உள்ளன.
மேலும் இதே கால கட்டத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 883 வழக்குகளும், 2017-ஆம் ஆண்டில் மட்டும் 944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
2017-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 49 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016-ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 64 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தில்லி போலீஸார் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.