மக்களவைத் தேர்தலுடன் தமிழக பேரவைத் தேர்தலும் நடக்கும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
வரும் 2019 மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாக
ஈரோடு: வரும் 2019 மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வரலாறு காணாத வகைகளில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் உள்பட எரிப்பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே யானைப்பசிக்கு சோளப்பொரியை போடுவது போல் மத்திய அரசு ரூ 1.50 மட்டும் குறைத்து உள்ளது.
தேர்தலுக்கு பயந்தே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பருவமழையை காரணம் காட்டியுள்ளது. இதையடுக்கு தேர்தல் ஆணையமும் இடைத்தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டால் தலைமை செயலாளரை கைகாட்டுகிறார். முதல்வர் சொல்லித்தான் ஒரு தலைமை செயலாளர் செயல்பட முடியும் என கூற விரும்புகிறேன்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மோடியை சந்திக்க தில்லி சென்றுள்ளாரே தவிர, பொதுமக்களின் நலனுக்ககாக அல்ல என்றார்.
நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் நடிகர்களாக நடித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
வரும் 2019 மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயராக உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. தலைவர் யார் என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார் என இளங்கோவன் தெரிவித்தார்.