பேராசிரியர் மீதான பாலியல் புகார்: மாணவி ஆஜராகி விளக்கம் தர வேளாண் பல்கலை. விசாரணைக்குழு நோட்டீஸ்
வாழவச்சனூரில் பேராசிரியர்கள் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் குழு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலை: பேராசிரியர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாரணைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க பாதிக்கப்பட்ட மாணவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, பி.எஸ்சி., 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த மாணவிக்கு கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
இந்த விசாரணைக் குழுவிடம் கடந்த திங்கள்கிழமை மாணவி நேரில் ஆஜராகி, தன்னிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் அளித்தார்.
இந்நிலையில், இன்று திங்கள்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (செப் 3) நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என வேளாண் பல்கலை. விசாரணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.