ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்புக்கான இங்கிலாந்தை சேர்ந்த 2 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி42 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி 8 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவா எஸ்.ஏ.ஆர், எஸ்1-4 ஆகிய இரு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வணிக நோக்கில் விண்ணில் ஏவியது.
445 கிலோ எடை கொண்ட நோவா எஸ்.ஏ.ஆர். செயற்கைக்கோள் இயற்கைப் பேரிடர், வெள்ளஅபாயம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும்.
444 கிலோ எடைக்கொண்ட எஸ்1-4 என்ற செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கண்காணிக்கும்.
பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது. இது இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.