முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி(66) மறைவு நாட்டிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 12.07 மணியளவில் காலமானதாக எய்மஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அருண் ஜேட்லியின் மறைவையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அவரது மரணம் நாட்டிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். என் வருத்தத்தை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் ஒரு சக்திவாய்ந்த அறிவுஜீவி, ஒரு திறமையான நிர்வாகி மற்றும் அப்பழுக்கற்ற நேர்மையான மனிதர் என தெரிவித்துள்ளார்.