முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜ்ஜார் இனத்தவர்கள் ரயில் தண்டவாளங்களை மறித்து போராட்டம்

ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூக மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:06 AM
பகிர்:


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூக மக்கள் ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தும் ரயில்களை மறியல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007 ஆம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தி வந்தனர்.  
 
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017 இல் மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில், குஜ்ஜார் சமூக மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தும் கூடாரங்கள் அமைத்தும் நகர மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தில்லி, மும்பை, ஜெய்ப்பூர் செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகின.

மேலும் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்று 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பகுஜ்ஜார் இனத் தலைவர் கிரோரி சிங் பைன்சலா தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கோரியுள்ள குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங், மாநில அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசத் தயார் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →