சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் நியமனத்துக்கு 3 மாதங்களில் தனித் தேர்வுக் கொள்கை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொருத்துநர்(ஃபிட்டர்) பிரிவில் ஐடிஐ முடித்துவிட்டு போக்குவரத்து கழகத்தில் பயிற்சிபெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவைசாமி என்பவர், தான் அரசு போக்குவரத்துத் துறைகளில் தொழில்பழகுநர் பயிற்சிப் பெற்றும் பணி வழங்கவில்லை என்றும் தனக்கு போக்குவரத்துக்கழகத்தில் பணி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் போக்குவரத்துத்துறையில் பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறைகளை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தேர்விற்கு 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், வழக்கு தொடர்ந்து மனுதாரருக்கு தேர்வில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக வயதுவரம்பை தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.