இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வரும் 25ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ‘எக்ஸ் எல்’ வகையில் 21-வது ராக்கெட்டாகும். அதேபோல் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறுகிறது.
509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ள கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோள், பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் அதி துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது. எதிரிகளின் ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் ஜூம் செய்து படம் பிடிக்கும் உயர் தெளவுத்திறன் கொண்டது.
தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கான கவுண்ட்டவுன் வரும் 23 ஆம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பரில் செலுத்தப்பட ரிசாட் வரிசை செயற்கைக்கோள்களுடன், ஜப்பான், லக்சம்பர்க், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட உள்ளன. இஸ்ரோவின் வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கான 3 செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.