புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த வழக்கில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்த பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த வழக்கில் இந்திராணி அப்ரூவராக மாறினார். இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், விசாரணை தில்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ப.சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வரும் நிலையில், பெருமாளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.