உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீலையம்பட்டி, கோட்டூர், பூமலைகுண்டு, கோடாங்கிப்பட்டி என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக பூக்கள் விலை வெகுவாக குறைந்தது .
சீலையம்பட்டி போன்ற இடங்களில் தோட்டத்தில் விளைவிக்கபட்ட பூக்களை கூட பறிக்க முடியாத சூழ்நிலையில் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்தன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பூக்களின் தேவை அதிகமானதால் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
மேலும் பக்ரீத், சனிப்பிரதோஷம் அதனை தொடர்ந்து ஆடி பதினெட்டாம் பெருக்கு போன்ற சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்தன.
இதன் மூலமாக மாவட்டத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ. 900, ஜாதிப்பூ ரூ. 700, முல்லைப் பூ ரூ. 800, சம்பங்கி ரூ 300, துளசி ரூ. 100 என அனைத்துப் புகழும் விலை பல மடங்கு உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த நான்கு மாதங்களாக விவசாயிகளுக்கு எவ்வித வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். விளைவிக்கப் பட்ட பூக்களை கூட பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது பூக்களின் வரத்து குறைந்த நிலையில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் பூக்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதால் பூக்களுக்கு விலை கிடைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.