சங்ககிரி,ஆக.5: சேலம் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா தொற்று பணியில் மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு தமிழகரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு உயர்தரமான கிசிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அரசாணையின்படி ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்க வேண்டும், கரோனா நோய் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்தியுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அலுவலர்களுக்கும் உயர்தர தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்பு அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சங்ககிரியில் உள்ள வருவாய்கோட்டாட்சியர், வட்டாட்சியர், சமூகநலத்துறை, நில அளவீடு, வட்ட வழங்கல், ஆதிதிராவிடர் நலத்துறை, முத்திரைத்தாள் உள்ளி அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் 38 பேர் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவர் ரமேஷ் தலைமையில் தற்செயல் விடுப்பு எடுத்து புதன்கிழமை சேலத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், இதே கோரிக்கையினை வலியுறுத்தி வியாழக்கிழமையும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.