முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜகவில் நடிகர் எஸ்.வி.சேகரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை -அமைச்சர் ஆர்.காமராஜ்

பாஜகவில் நடிகர் எஸ்.வி.சேகரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார் உணவு அமைச்சர் ஆர்.காமராஜ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
நீடாமங்கலத்தில் கரோனா தடுப்பு மருத்துவமுகாம்
பகிர்:

நீடாமங்கலம், ஆக.6: பாஜகவில் நடிகர் எஸ்.வி.சேகரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார் உணவு அமைச்சர் ஆர்.காமராஜ்.

நீடாமங்கலத்தில் கரோனா தடுப்பு மருத்துவமுகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்தார். துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு விஜயகுமார் வரவேற்றுப்பேசினார்.

முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் ஆகியவற்றை வழங்கி உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில், கரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காதவரை அச்சம் இருக்கத்தான் செய்யும். எல்லா நாடுகளிலும் மருந்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

உயிருக்கு ஆபத்து என்கிற போது மருந்து தயாரிப்பது தேவையாகவுள்ளது. அம்மை, காலரா, போலியோ போன்ற நோய்களுக்கு மருந்து உள்ளது. உலகத்திலேயே இந்தியாதான் போலியோவை விரட்டியுள்ளது. போலியோ தடுப்பில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.

வாழ்க்கை சுழற்சிக்குள்தான் வாழவேண்டியுள்ளது. கரோனா தொற்று அதிகரிக்கும் போது அலட்சியம் கூடாது. கரோனா தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து அரசு காப்பாற்றும். ஆனால் தொற்று வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது. உலகத்திலேயே தமிழக்ததில் கரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை குறைவு. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். முககவசம் அணியவேண்டும் என கூறினார்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி, வட்டாட்சியர் மதியழகன் மற்றும் சுகாதார அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரிதிநிதிகள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.150 பேர் முகாமில் பயனடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது, தமிழக முதல்வர் அவ்வப்போது ஆய்வு நடத்தி அதனடிப்பைடயில் எடுத்துவரும் நடவடிக்கையால் கரோனா தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுவருகிறது.

இந்த தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 78.55 சதவிகிதமாகவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 88 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க வில் இருந்தவர். கட்சி கொடிபோட்ட காரில் சென்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர். அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார். ஆனால் பாஜகவினர் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சிரிப்பு நடிகர் வடிவேல் ஒரு படத்தில் நானும் ரவுடிதான் என்று சொல்லிக் கொள்வதைப்போல எஸ்.வி.சேகர் தான் தன்னைத் தானே பாஜக என சொல்லிக் கொள்கிறார்.

பாஜகவிற்கு ஏற்பட்ட கரும்புள்ளி எஸ்.வி.சேகர் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். மத்திய அமைச்சரே இந்தி திணிப்புக் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.