கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருவதால் ஏலக்காய் தோட்டங்களில் செடிகள் முறிந்து விழுந்து நாசமாகின.
இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாறு, உடும்பன்சோலை, பீர்மேடு, தேவிகுளம் ஆகிய வட்டாரங்களில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் பரவலாக சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏலக்காய் தோட்டங்களில் மரங்கள் மற்றும் செடிகள் முறிந்து விழுந்தன.
தற்போது, அறுவடை பருவத்தில் உள்ள ஏலக்காய் செடிகள் முறிந்து விழுந்தும், தோட்டங்களில் தண்ணீர் தேங்கியும் காணப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் கன மழையால் ஏலத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அங்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.