முகப்பு
தற்போதைய செய்திகள்

இணையவழி கல்வி: சிக்னலுக்காக மரத்தில் ஏறி படிக்கும் மாணவர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காமல் மலை கிராமங்களில் உள்ள மாணவர்கள் இணையவழிக் கல்வி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
இணையவழி கல்வி: சிக்னலுக்காக மரத்தில் ஏறி படிக்கும் மாணவர்கள்
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காமல் மலை கிராமங்களில் உள்ள மாணவர்கள் இணையவழிக் கல்வி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் வைகை ஆறு உற்பத்தியாகும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் 200-க்கும் மேற்பட்ட மலைசார்ந்த கிராமங்கள் உள்ளது. இதில் பெரும்பாலான கிராமங்களில் தொலை தொடர்பு வசதிகள் இல்லாத பகுதிகளாக உள்ளது.

இந்த கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்படும்   தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். 

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் செயல்படவில்லை. தற்போது இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 3 மணிநேரம் வரையில் இணைய வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மலைகிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் கிராமத்தில் உயரமான மலைப்பகுதி, மரங்கள்,  உயரமான கட்டிடங்களில் ஏறி சிக்னல் கிடைக்கும் இடங்களில் அமர்ந்தபடி இணைய வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக 10 முதல் 12 வகுப்புகள் படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு என்பதால் மிகுந்த சிரமத்துடன் இணைய வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். 

மாணவர்கள் மரங்களில் சிக்னல் கிடைக்கும் இடங்களில் பரண் அமைத்து வகுப்புகளில் பங்கேற்கின்றனர். இதேபோல மாணவிகள் பெற்றோரின் துணையுடன் உயரமான பாறைப்பகுதிகளுக்கு சென்று வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். 

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் செல்லிடப்பேசி சிக்னல் பிரச்சனையால் 50 சதவீத மாணவமாணவிகளுக்கு மட்டுமே இணைய வகுப்புகள் நடத்த முடிகிறது என்று ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

செல்லிடப்பேசி சிக்னல் கிடைத்தால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வகுப்புகள் நடத்தமுடியும் என்றும் தெரிவித்தனர். மலைகிராமங்கள் அதிகம் உள்ள கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் செல்லிடப்பேசி சிக்னல் கிடைக்கும்படி கூடுதல் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க அரசு மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

முழு கட்டுரையைப் படிக்க →