ஹோர்முஸ் நீரிணை மூடல்: 28 இந்தியக் கப்பல்கள், 778 மாலுமிகளின் நிலை என்ன?
பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் நிலை பற்றி...
ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ள பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 28 இந்தியக் கப்பல்கள், 778 மாலுமிகளின் நிலை குறித்து இந்திய அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரினை பாரசீக வளைகுடாவில் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் மிக முக்கியமானது. இந்த நீரிணை பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடனும், அதற்கு அப்பால் உள்ள அரேபிய கடலுடனும் இணைக்கிறது. இது சர்வதேச கப்பல் வழித்தடமாக உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக அறிவித்த ஈரான், ஹோர்முஸ் நீரினையைக் கடந்து செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
Advertisement
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகில் பல நாடுகள் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் 28 இந்தியக் கப்பல்களும் அதிலுள்ள 778 மாலுமிகளும் பாரசீக வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள நிலையில் அவற்றின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதில் 24 கப்பல்கள் 677 மாலுமிகளுடன் ஹோர்முஸ் நீரிணையின் மேற்கு பகுதியிலும், 4 கப்பல்கள் 101 மாலுமிகளுடன் கிழக்குப் பகுதியில் சிக்கியிருப்பதாகவும் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “நாங்கள் அங்குள்ள நிலைமையையும், நமது கப்பல்களின் போக்குவரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிகாரிகள், கப்பல் மேலாளர்கள் தொடர்ந்து இந்திய தூதரகங்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பை உறுதி செய்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மாலுமிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தொழில்துறை மற்றும் பங்குதாரர்களிடம் பேசி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அனைத்து இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை அதிகரிக்க, தொடர்ந்து நேரடி தகவல்களை வழங்கும் நடைமுறையை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தால் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கவும், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் துறைமுகங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.