நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆஜரானார் ஞானவேல் ராஜா
ராமநாதபுரத்தில் நடந்த தனியார் நிதி நிறுவன மோசடியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திடீரென காவல்துறையில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
ராமநாதபுரம், ஆக.7 : ராமநாதபுரத்தில் நடந்த தனியார் நிதி நிறுவன மோசடியில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திடீரென காவல்துறையில் வெள்ளிக்கிழமை ஆஜரானார். விசாரணைக்கான நேரம் முடிந்துவிட்டதால் அவரை சனிக்கிழமை காலையிலும் ஆஜராக காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் நிதி நிறுவன மோசடியில் சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரம் பகுதி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வாக்குமூலம் அடிப்படையில் மோசடிப் பணத்தை திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட 3 பேரிடம் அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு ராமநாதபுரம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கி.வெள்ளத்துரை சார்பில் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது.
சம்மனுக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்குமாறு ஞானவேல்ராஜா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சம்மனுக்கு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தன்னைக் கைது செய்யக்கூடாது என அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்து உத்தரவு பெற்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரையில் ராமநதாபுரம் காவல்துறை அதிகாரிகளிடம் ஆஜராகாமலிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திடீரென மழை பெய்த நிலையில் வழக்குரைஞருடன் ஆஜரானார்.
ஆனால், நேரமாகிவிட்டதால் சனிக்கிழமை காலையில் ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீது எந்தக்குற்றமும் இல்லை. ஆகவே நான் விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன் என்றார்.