கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயன், மனோஜ் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்த கும்பல் அங்கு கொள்ளையில் ஈடுபட்டது.
இந்த கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயன், மனோஜ், தீபு உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தொடர்புப்படுத்தி நாரதா என்ற இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சயன், மனோஜ் ஆகியோரது பேட்டிகள் இடம்பெற்றன. இதனையடுத்து சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நீலகிரியில் உள்ள தனியார் விடுதி பெண் உரிமையாளரை மிரட்டியதாக சயன், மனோஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னர் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 சாட்சிகளை மிரட்டியுள்ள சயன், மனோஜை ஜாமீனில் விடுவித்தால், அரசுத் தரப்பின் மற்ற சாட்சிகளையும் மிரட்டக் கூடும். தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. 3 மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் எதுவும் இல்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சயன், மனோஜ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.