நவம்பர் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ. 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மத்திய ஜிஎஸ்டி ரூ. 19,189 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 25.540 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 51,992 கோடி (பொருள்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 22,078 கோடி உள்பட) மற்றும் கூடுதல் வரி (செஸ் வரி) ரூ. 8,242 கோடி (பொருள்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 809 கோடி உள்பட) என மொத்தம் ரூ. 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டு நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூலைக் காட்டிலும் 1.4 சதவிகிதம் கூடுதலாகும்.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு முறையாக செலுத்தப்பட வேண்டிய முறையே ரூ. 22,293 கோடியும், ரூ. 16,286 கோடியும் செலுத்தப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்துக்கான மொத்த வருவாயாக மத்திய ஜிஎஸ்டி ரூ. 41,482 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ. 41,826 கோடியும் ஈட்டியுள்ளது.
மேலும் நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவ கணக்குத் தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை நவம்பர் 30 நிலவரப்படி 82 லட்சம் என அரசு தெரிவித்துள்ளது.