ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் உள்ள சின்ஜியங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சீனாவிலிருந்து பெருந்துறைக்கு திரும்பிய அந்த வாலிபருக்கு திடீரென சளி, காய்ச்சல் அதிகமானது. இதனால் கரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அந்த வாலிபர் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இதையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபரின் ரத்த மாதிரியை எடுத்து அதை சென்னையில் உள்ள கரோனா வைரஸ் செல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சோதனை முடிவு தெரியும் வரை தனி வார்டில் இருக்க வேண்டுமென அந்த வாலிபருக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் தனி வார்டில் இருந்த அந்த வாலிபர் திடீரென வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று ரத்தப் பரிசோதனை முடிவு தெரியும்வரை வீட்டில் தனி அறையில் இருப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.