கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட செல்வந்தரை கொன்று ஆற்றில் வீசி விட்டதாக உறவினரான இளைஞர் உள்ளிட்ட 3 பேரை காவலர்கள் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள வெள்ளாள விடுதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் தவமணி (50) செல்வந்தரான இவர் தமிழகத்தில் உள்ள பெரிய நகை கடை, ஜவுளி கடைகளுக்கு உள் அலங்காரம் மற்றும் மர வேலைபாடுகள் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சென்னை, திருச்சி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய பண்ணைகளும் உள்ளது.
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தவமணியை மர்ம நபர்கள் கடத்தி சென்று குடும்பத்தாரிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
குடும்பத்தினர் இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. வே. அருண் சக்தி குமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் கோபாலச்சந்தின் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், வெள்ளாள விடுதி கிராமத்தைச் சேர்ந்த தவமணியின் உறவினரான அழகர் மகன் கமல் (30) உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்திற்காக தவமணியை கடத்தியதாகவும், அவரை கொன்று கல்லனை தோகூர் பகுதியில் ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து கமல் உள்ளிட்ட மூவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.