வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, ரூ.30,000 மதிப்புள்ள முழு முக கண்ணாடி கவசங்கள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் அன்னை அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, வாழப்பாடி அரிமா அரங்கத்தில் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, முன்னாள் தலைவர் ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். அன்னை சங்க முன்னாள் தலைவர் வளர்மதி வரவேற்றார். முன்னாள் பன்னாட்டு இயக்குநர் டி.தனபாலன், வாழப்பாடி அரிமா சங்க தலைவர் முனைவர் ஜவஹர், நிர்வாக செயலர் பெரியார்மன்னன், சேவை செயலர் மருத்துவர் பொன்னம்பலம், பொருளாளர் பன்னீர்செல்வன் மற்றும் அன்னை அரிமா சங்க தலைவர் புஷ்பா எம்கோ, செயலர் சுதாபிரவு, பொருளர் தேன்மொழிசெந்தில் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் விஜயக்குமார் சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் பேளூர் வட்டார சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ. 30 ஆயிரம் செலவில், 70 முழு முக கண்ணாடி கவசங்கள் வழங்கப்பட்டது. கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, சங்க உறுப்பினர்கள் உட்பட 200 பேருக்கு, நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் 'ஆர்சனிக் ஆல்பம் 30சி' ஹோமியோ மருந்துகள், முகக் கவசங்கள் மற்றும் சோப்புகள், ரூ 10,000 செலவில் வழங்கப்பட்டது.
இயற்கை முறையில் வீடுகளில் காய்கறித்தோட்டங்களை அமைக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலவச காய்கறி விதைகள் வழங்கப்பட்டது. கொட்டவாடி சாலையில் மரக்கன்றும் நடப்பட்டது.
புதிய உறுப்பினர்களை அரிமா மாவட்ட முதன்மை அலுவலர் மருத்துவர் ராமகிருஷ்ணன் சங்கத்தில் இணைத்து வைத்தார். முன்னாள் ஆளுநர்கள் பழனிவேலு, மணி, மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட துாதர்கள் மருத்துவர் மோதிலால், தேவராஜன், வட்டார தலைவர்கள் வெற்றிச்செல்வன், பார்த்தசாரதி, கண்ணொளித்திட்ட மாவட்ட தலைவர் தமிழ்மணி, மாவட உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் காணொலி காட்சி வழியாக விழாவில் பங்கேற்றனர். நிறைவாக, வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பெரியார்மன்னன் நன்றி கூறினார்.