முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கடவுள் ராமர் கரோனாவை அழித்துவிடுவார்: பாஜக

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கடவுள் ராமர் கரோனாவை அழித்துவிடுவார் என்று பாஜக தலைவர் ராமேஸ்வர் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Updated On : 23 ஜூலை, 2020 at 11:37 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:29 PM

குவாலியர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கடவுள் ராமர் கரோனாவை அழித்துவிடுவார் என்று பாஜக தலைவர் ராமேஸ்வர் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக " ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.

அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோவில் பகுதியில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. 

Advertisement

இந்நிலையில், ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஜூலை 2-ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் ‘பூமி பூஜை’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அன்று பிரதமர் நரேந்திர மோடி  'ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை சபாநாயகரும் பாஜக தலைவருமான ராமேஸ்வர் சர்மா குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி 'ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான கரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும்.

"பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும்" என்று சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் “இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டுமல்லாமல், நமது புனித நபர்களை நினைவில் கொள்கிறோம். உச்ச நீதிமன்றமும் ராமர் கோவில் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளது, ”என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நிகழ்ச்சியின் போது அனைத்து சமூக இடைவெளி விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும், இந்த விழாவில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். 

தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் கொண்டாடும் விதமாக தீபாவளியின்போது ஒவ்வொரு ஆண்டும் பகவான் ராமர் ஆடம்பரமாகவும், அழகாகவும் வணங்கப்படுகிறார், ஆனால் பாஜகவினர் கரோனா தொற்றுநோய் குறித்த தனது தீர்க்கதரிசனத்துடன் விசுவாசிகளுக்கான ஒரு புதிய கட்டுக்கதையைச் சேர்த்துள்ளார்.

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆறு மாதங்களில்  இதுவரை 12,38,635 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 29,861 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ள நிலையில், 7,82,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.