ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை இல்லை எனக் கூறி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் தனியார் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை இல்லை எனக் கூறி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கராயபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ள கரோனை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனியார் மருத்துவமனைகளிலும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகளிலும் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதே போல் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 300 படுக்கைகள் வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு காஞ்சிபுரம் மாவட்டதிற்குட்பட்ட குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 160க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனையில், உணவு, கழிவறை வசதிகள் இல்லை, குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை, தண்ணீர் வருவதில்லை, முறையாக மருந்துகள் வழங்கவில்லை என குற்றம்சாட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி உதவி ஆணையர் செம்பேடுபாபு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மருத்துவமனைக்குள் சென்றனர்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பூந்தமல்லி குன்றத்தூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.