மதுரையில் அரசு செவிலியர்கள் போராட்டம்
மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதியிலிருந்த வெளியேற்றப்பட்டதால், அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதியிலிருந்த வெளியேற்றப்பட்டதால், அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் சுழற்சி முறை முடிந்தவுடன் 7 நாள் தங்கு விடுதியிலும், 7 நாள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தங்கு விடுதியில் தங்கும் காலத்தில் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும்.
இந்நிலையில் அரசு கரோனா மருத்துவமனையில் 70 செவிலியர்கள், சுழற்சி முறை பணி முடிந்ததையடுத்து, பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே செவிலியர்களை தங்கும் விடுதியை காலி செய்யச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகத் தெரிகிறது. மேலும், மதிய உணவும் வழங்கப்படவில்லை.
இதையடுத்து செவிலியர்கள் அனைவரும் தங்கும் விடுதி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பரிசோதனை முடிவுகளைத் தெரிவித்தது.
அதில், 5க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற செவிலியர்கள் வீடு திரும்பினர். கடைசி வரை போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.