மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சொந்த மாவட்டமான புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பி வருகின்றனர். சுமார் 42 பேர் இரு குழுக்களாக கறம்பக்குடி பகுதியில் அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஒரு வயது ஆண் குழந்தை உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைக்குழந்தையின் பெற்றோருக்கு கரோனா தொற்று இல்லை.
இந்த நிலையில் குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அரசு மருத்துவக் கல்லூரியின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள ராணியார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தையுடன் தாயும் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் சிறப்பு மருத்துவர் குழுவும் ராணியார் மருத்துவமனை வளாகத்துக்கு அவ்வப்போது வந்து குழந்தையின் உடல்நலனைக் கண்காணித்து வருகிறது.