மயிலாடுதுறை: கூகுள் மேப் செயலியில் உள்ள யுவர் டைம்லைன் பதிவுகளில் உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்படுவதால் குடும்ப சிக்கல், குடும்ப வன்முறை, சித்ரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்திவரும் மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் ஆர்.சந்திரசேகரன் அளித்த புகார் மனுவின் விபரம் வருமாறு:
சந்திரகேரனின் மனைவி அவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி, அதில் கூகுள் மேப்-பின் யுவர் டைம் லைன் என்ற செயலியை ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதில், கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாக காட்டியுள்ளது. இதனால் அவரது மனைவி தூக்கம் இல்லாமல் அதைப்பற்றியே சிந்தனையோடு இருந்து, அவர் மட்டும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையே பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.
மே மாதம் 20-ஆம் தேதி அவர் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் குடும்பத்தில் சந்தேகமும், பல்வேறு பிரச்னைகளும் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக குடும்ப உறவினர்கள், மனநல மருத்துவர்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.
கூகுளை நம்பிய சந்திரசேகரனின் மனைவி அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்த சந்திரசேகரன், கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்கவும், நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.