தற்போதைய செய்திகள்

கீழடி,கொந்தகையை தொடர்ந்து மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகையை தொடர்ந்து, மணலூரில் சனிக்கிழமை அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்தபோது, இங்கு பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பல வகையான பொருள்கள் கண்டறியப்பட்டதுடன், பழமையான நகர நாகரிகம் இருந்தது தெரியவந்தது. 

கீழடியைத் தொடர்ந்து, அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்பட வேண்டும், அப்போதுதான் தமிழர்கள் வாழ்ந்ததற்கான நகர நாகரிகம் முழுமையாகத் தெரியவரும் என கோரிக்கைகள் எழுந்தன.

அதன்பேரில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணியை தொடக்கி வைத்தார். மேலும், அகழாய்வுப் பணிகள் கொந்தகை, அகரம், மணலூருக்கும் விரிவுபடுத்தப்பட்டன. இதற்கு, தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, பொது முடக்கம் காரணமாக, கீழடியில் நடந்து வந்த 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 56 நாள்கள் கழித்து கடந்த புதன்கிழமை இப்பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 
இதன் தொடர்ச்சியாக, தற்போது மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு, யோகலெட்சுமி என்பவரது 2 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு, அகழாய்வுக்கான குழிகள் தோண்டும் பணி, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இப்பணியில் 10}க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முகக் கவசம் அணிந்து ஈடுபட்டனர்.

இது குறித்து துணை இயக்குநர் சிவானந்தம் கூறியது: கீழடி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நகர நாகரிகம்  கண்டறியப்பட்டது. கொந்தகை அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. தற்போது, மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்த ஆய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்கு, செப்டம்பர் மாதம் வரை அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT