தமிழகச் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செல்லிடப்பேசிக்கு செவ்வாய்க்கிழமை அழைத்த மர்ம நபர் ஒருவர் அவரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டார்.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக கட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, அதிமுக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கூடுதல் சிறப்பு வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியதாவது: சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு செல்லிடப்பேசியில் அழைத்த மர்ம நபர் அவதூறாகப் பேசியதுடன், இரண்டு நாளில் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அமைச்சரின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும், கொலை மிரட்டலும் விடுத்து பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ரவீந்திரன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுகளம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கங்காதரன் (வயது 40) என்பது தெரியவந்தது. உடனடியாக, குற்றப் பிரிவு காவலர்கள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று புதன்கிழமை கங்காதரனை பிடித்து விழுப்புரம் மாவட்டத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், அவர் டிராக்டர் ஓட்டுநர் என்பதும், மது போதையில் அமைச்சரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்ததாம்.
இது தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.