கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி பலி: கண்கள் தானம்
செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இறந்த மாணவியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது.
செய்யாறு: செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்த மாணவியின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சுசீந்திர பாளையம் ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மூத்த மகளின் திருமணம் வரும் ஜன.24 -ம் தேதி நடைபெறவுள்ளது.
மகளின் திருமணப் பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் தும்பை கிராமத்திற்கு குடும்பத்தோடு வந்துள்ளனர். அவர்கள், திங்கள்கிழமை முனுகப்பட்டு கோயிலுக்குச் சென்று குடும்பத்தோடு சாமியை வழிபட்டு வந்தனர்.
Advertisement
நாராயணனின் மூன்றாவது மகள் சுதா (19). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், தும்பைக் கிராமத்தில் உள்ள சிலருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சுதா சென்றுள்ளார்.
கிணற்றுப் படிக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுதா, கால் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. நீச்சல் தெரியாத காரணத்தால் அவர் கிணற்று நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது.
உடனடியாக, செய்யாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் மூழ்கி இருந்த சுதாவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்த செய்யாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்கள் தானம்
சுதாவின் கண்களை தானம் அளிக்க அவரது பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் செய்யாறு ரிவர்சிட்டி லயன்ஸ் சங்க உதவியுடன் காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவக் குழுவினர் கண்களை தானமாகப் பெற்றனர்.