யூடியூபர் மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்றக் காவல்
சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் தலைமறைவாக இருந்த யூடியூபர் மதனை நேற்று காவல்துறை கைது செய்த நிலையில், இன்று பிற்பகல் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார்.
மதன் என்பவர் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசும் விடியோ, ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து வடபழனியைச் சேர்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் செய்தார்.
சைபர் குற்றப்பிரிவு மதன் மீது ஆபாசமாக பேசுதல், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மதனை, கைது செய்வதற்கு தீவிரம் காட்டி வந்தனர். அதேவேளையில் மதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இரு சேனல்களுக்கும் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் தலைமறைவாக இருந்த கிருத்திகாவை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பப்ஜி மதன் நேற்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.
தருமபுரியில் கைது செய்யப்பட்ட மதனை நேற்று இரவு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.