5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் ஜனநாயக தன்மையுடன் நடப்பதை உறுதி செய்வோம் என மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் குல்திப் சிங் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகம், அசாம், கேரளம், மேற்குவங்கம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் இறுதி வாரம் முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் குல்திப் சிங் கூறியதாவது,
மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் 5 மாநிலங்களுக்கும் தேர்தலின் முந்தைய ஏற்பாடுகள், கொடி அணிவகுப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக மற்றும் ஜனநாயக முறையில் நடப்பதை உறுதி செய்வோம்.
சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கியமான பகுதிகளில் உள்ள வீரர்களை தேர்தல் பணிக்காக திரும்பப் பெற மாட்டோம். தேவைப்பட்டால், எங்கள் அலுவலகங்களில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அவர்களை பயன்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.