தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் மாசி மகப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.
தென்காசி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாள்கள் மாசி மகப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப் பெருவிழா வியாழக்கிழமை காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு மாவு பொடி, திரவியம், மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், கும்பநீர் ஆகிய 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மகப் பெருவிழாவில் நாள்தோறும் காலை இரவு நேரங்களில் சுவாமி அம்பாள் ஏக சிம்மாசன வாகனம், பூத வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனங்களில் எழுந்தருளி ரதவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான வருகிற 21 ஆம் தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாரதனையும், 28 ஆம் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23 ஆம் தேதி சுவாமி அம்பாள் திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. திருத்தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.