கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(மே 24) தனது 79ஆவது பிறந்தநாளினைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”மாண்புமிகு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் நிறைந்த வருடமாக அமையட்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பினராயி விஜயன், 1945ஆம் ஆண்டு கோரனுக்கும் கல்யாணிக்கும் மகனாக பினராயி கிராமத்தில் பிறந்தார். அவரது இளம்வயதிலேயே தந்தையின் மரணத்தால் மிகவும் துன்புற்றார். இதனால், பள்ளிக்கல்வியை முடித்த பிறகு படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவர் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே தலச்சேரியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் தன் படிப்பினை முடித்தார்.
பினராயி விஜயன், மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தார் மற்றும் கேரள மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராகத் தொடங்கி, பின்னர் இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆனது. கேரள மாணவர் கூட்டமைப்பின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார். கேரள சோசலிஸ்ட் இளைஞர் கூட்டமைப்புத் தலைவராகவும் பணியாற்றினார்.
பினராயி, 24 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கன்னூர் மாவட்டக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 28ஆவது வயதில் மாவட்டச் செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988இல் மாநிலச் செயலக உறுப்பினரானார். 1970ஆம் ஆண்டு குத்துபரம்பா தொகுதியில் முதல்முறையாக கேரள சட்டப்பேரவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977, 1991, 1996 மற்றும் 2016இல் மீண்டும் வெற்றி பெற்றார். கேரள சட்டமன்ற உறுப்பினராக, மக்களின் உரிமைகளுக்காகவும், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காகவும் நின்றார்.
1996 இ.கே.நாயனார் அமைச்சரவையில், மின்சாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக பினராயி விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது திறமையான தலைமையின் கீழ், அரசு மிக விரைவான நேரத்தில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தது. கேரளம் இதுவரை கண்டிராத மிகச்சிறந்த மின்சாரத்துறை அமைச்சர்களில் ஒருவராக இன்றும் புகழப்படுகிறார்.