அஸ்ஸாம்: கெளகாத்தி, டின்சுகியா மாவட்டத்தைச் சார்ந்த நகரொன்றில் நடுத்தர வயதுப் பெண்ணொருவரும் அவரது இரு மகன்களும் கார் விபத்தில் மரணமடைந்தனர். இறந்த பெண்ணின் பெயர் மோனிகா குமார். அவர் தனது மகன்களைப் பள்ளியில் இறக்கி விடச் சென்ற நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. மோனிகா குமார், தனது காரில் இன்று காலையில் தனது மகன்களான சாக்சன் மற்றும் ப்ரியம் இருவரையும் பள்ளியில் இறக்கி விடச் சென்றார். பயணத்தின் போது மூத்த மகன் சாக்சன் தானே காரை ஓட்டி வருவதாகக் கூற மோனிகா அதற்கு அனுமதியளித்திருக்கிறார்.
காரை, சாக்சன் அதிவேகத்தில் ஓட்டிச் செல்ல, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருளத்தொடங்கியிருக்கிறது. மூத்த மகன் சாக்சன் 11 வகுப்பு மாணவர், இளைய மகன் ப்ரியம் 9 ஆம் வகுப்பு மாணவர். அதிவேகப் பயணத்தின் காரணமாக நிகழ்ந்த இந்த விபத்தில் மோனிகா குமாரும், சாக்சனும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, இளைய மகன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.