முகப்பு
சிறப்புச் செய்திகள்

பெரும் உயிரிழப்புகளைத் தவிர்த்து உயிரிழந்த விமானி தீபக் சாத்தே: உறவினர் உருக்கம்

எண்ணற்ற உயிர்களைக் காத்துத் தன்னுயிர் துறந்த,  கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் முதன்மை விமானி பற்றிய உறவினரின் துயரப் பதிவு

Updated On : 8 ஆகஸ்ட், 2020 at 5:00 PM
பெரும் உயிரிழப்புகளைத் தவிர்த்து உயிரிழந்த விமானி தீபக் சாத்தே: உறவினர் உருக்கம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM

நம்பவே முடியவில்லை, தீபக் சாத்தே இப்போது இல்லை என்று குறிப்பிட்டு, எண்ணற்ற உயிர்களின் இழப்பைத் தவிர்த்துத் தன்னுயிர் போக்கிய கோழிக்கோடு  விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் அவருடைய உறவினரும் நண்பருமான நிலேஷ் சாத்தே. 

கேரளத்தில் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்று பள்ளமான பகுதிக்குள் சரிந்ததால் இரண்டாக உடைந்து சிதைந்தது. 

இதில், முதன்மை விமானி தீபக் சாத்தே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமார் உள்பட 19 போ் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விமானி தீபக் சாத்தேவின் சாதுர்யத்தால்தான் விமானம் இரண்டாக உடைந்தும் தீப்பற்றி எரியாமல் தப்பியதால் உயிரிழப்பும் குறைந்ததாக நிலேஷ் சாத்தே குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இனி அவரே சொல்கிறார்..

"எனது உறவினராக மட்டுமல்லாமல், நெருங்கிய நண்பராகவும் இருந்த தீபக் சாத்தே இப்போது உயிரோடு இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபையில் இருந்து பயணிகளை அழைத்துக் கொண்டு வந்தபோது, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு, ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி அவர்.

விபத்து பற்றித் தெரியவரும் தகவல்கள் இவை:

- விமானத்தை தரையிறக்குவதற்கான கியர்கள் சரியாக வேலை செய்யவில்லை.
- இந்திய விமானப் படையின் முன்னாள் விமானி (தீபக் சாத்தே) விமான நிலையத்தை மூன்று முறை சுற்றி வந்து, விமானத்தின் எரிபொருளைக்  காலிசெய்துவிட்டு, தரையிறக்கியதால், விமானம் விழுந்ததும் தீப்பற்றுவதிலிருந்து தப்பியது. அதனால்தான் விபத்து நிகழ்ந்த இடத்தில் விமானத்தில் இருந்து எந்த புகைப்படலமும் எழவில்லை. 
- விமானம் விபத்துக்குள்ளாகும் முன்னர், விமானத்தின் என்ஜின்களை விமானி அணைத்துவிட்டுள்ளார்.
- மூன்று முறை முயன்றுதான் அவர் விமானத்தைத் தரையிறக்கியுள்ளார்.
- விமானத்தின் வலது இறக்கை சேதமடைந்துள்ளது.
- விமானி உயிர்த் தியாகம் செய்துள்ளார், ஆனால், உடனிருந்த 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

தீபக் மிகச் சிறந்த அனுபவமிக்க விமானியாவார். விமானங்களை இயக்குவதில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு அகாதெமியில் தேர்ச்சி பெற்றவர், 58-வது பட்டப்பிரிவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி அடைந்தார். 'ஸ்வார்ட் ஆஃப் ஹானர்' என்ற விருதைப் பெற்றவர்.

2005 ஆம் ஆண்டு ஏர் இந்தியா பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் இணையும்முன் இந்திய விமானப் படையில் 21 ஆண்டு காலம் சேவையாற்றியவர் தீபக் சாத்தே. 

கடந்த ஒரு வாரத்துக்கு முன்புகூட என்னைத் தொடர்பு கொண்டு, வழக்கமான உற்சாகத்தோடு பேசினார். அப்போது வந்தேபாரத் திட்டம் குறித்து நான் கேட்ட போது, ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களைத் தாயகம் அழைத்து வரும் பணியை மேற்கொண்டிருப்பது குறித்துப்  பெருமைப்படுவதாகக் கூறினார்.

வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிக்க மறுக்கும் நாடுகளுக்கு விமானத்தை இயக்கும்போது காலியான விமானத்தை நீ இயக்கிச் சென்றாயா? என்று நான் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார். "இல்லவே இல்லை. அதுபோன்ற விமான பயணத்தின்போது விமானத்தில் பழங்கள், காய்கறிகள், மருந்து பொருள்களை அந்த நாட்டுக்கு அளிக்கக் கொண்டு செல்வோம். ஒருபோதும் காலியான விமானங்களை இயக்குவதில்லை" என்று கூறினார். அதுதான் அவருடன் நான் பேசிய கடைசி உரையாடல்.

இந்திய விமானப் படையில் பணியாற்றிய போது 1990 ஆம் ஆண்டுகளில்கூட ஒருமுறை அவர் விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். அப்போது அவர் தலைக்காயமுற்று 6 மாதங்களுக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது மண்டையோடுகளில்கூட விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. அவர் மீண்டும் குணமடைந்து வந்து விமானத்தை இயக்குவார் என்று அப்போது யாருமே நினைத்துகூடப் பார்க்கவில்லை. ஆனால் அவரது தைரியமும், பறப்பதில் அவருக்கு இருந்த விருப்பமும் சேர, மீண்டும் விமானிகளுக்கான சோதனையில் தேர்ச்சி பெற்றார். அது மிகப் பெரிய அதிசயம்.

தீபக் சாத்தேவின் பெற்றோர்.

அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள். இருவருமே ஐஐடி மும்பையில் படித்தவர்கள். தீபக் சாத்தேவின் தந்தை கர்னல் வசந்த் சாத்தே. அவரது பெற்றோர் இருவரும் நாக்பூரில் வசித்து வருகிறார்கள். அவரது சகோதரர் கேப்டன் விகாஸ், ராணுவ வீரர். ஜம்முவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்.

மனைவி அஞ்சலியுடன் தீபக் சாத்தே.

இந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பதற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார் ஒரு வீரர் (தீபக் சாத்தே).

இந்தத் தருணத்தில் ஒரு வீரர் எழுதிய கவிதை எனக்கு நினைவில் வருகிறது.

போர்க்களத்தில் நான் இறந்தால்,
என்னைப் பெட்டியிலிட்டு, வீட்டுக்கு அனுப்புங்கள்

நான் பெற்ற விருதுகளை என் நெஞ்சில் வையுங்கள்,
நான் மிகச் சிறந்த பணியைச் செய்ததாக என் தாயிடம் சொல்லுங்கள்

தலைகுனிய வேண்டாம் என்று எனது தந்தையிடம் சொல்லுங்கள்
இனி என்னால் அவருக்கு எந்தப் பதற்றமும் ஏற்படாது என்று கூறுங்கள்

சிறப்பாகப் படிக்குமாறு எனது சகோதரனிடம் சொல்லுங்கள்
எனது இரு சக்கர வாகனத்தின் சாவியை இனி அவனே வைத்துக் கொள்ளலாம்

வருத்தம் அடைய வேண்டாம் என்று சகோதரியிடம் சொல்லுங்கள்
இந்த சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு அவளது சகோதரன் எழப் போவதில்லை.

என் அன்புக்குரியவளிடம் அழ வேண்டாம் என்று சொல்லுங்கள்,
”ஏனென்றால் நான், இறப்பதற்காகவே பிறந்த ஒரு ராணுவ வீரன்".

- நிலேஷ் சாத்தே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.