ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!
பறக்கும் ரயில் சேவை வந்த நிலையில் ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலையில் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எவ்வாறு, விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக இருக்கிறதோ அதுபோல பரங்கிமலை ரயில் நிலையமும் பல விதமான ரயில் சேவைகளை இணைக்கும் முனையமாக மாறியிருக்கிறது.
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வந்த பறக்கும் ரயில் சேவை தற்போது பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக, எழும்பூரிலிருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று சென்றால், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விரைவு ரயில்களைப் பிடிக்க எழும்பூர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே மண்டல மேலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அந்தக் கடிதத்தில், பயணிகள் தற்போது எழும்பூர் அல்லது சென்டிரலுக்கு 13 கி.மீ. மற்றும் 18 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியது உள்ளது. ஆனால், பரங்கிமலையில் விரைவு ரயில்கள் நின்றால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை ரயில் நிலையமானது, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தரைத்தளத்தில் அமையப்பெற்ற ரயில் நிலையமாகும். தற்போது, பரங்கிமலை - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அது முதல் தளத்தில் அமைந்துள்ளது. அடுத்து, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது.
தெற்கு ரயில்வேயும் பரங்கிமலை ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்புகளை அதிகரித்து, நாள்தோறும் 10,000 ரயில் பயணிகளை எதிர்கொள்ளத் தேவையானவற்றை செய்துள்ளது. ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலிருந்து (ஆதம்பக்கம்) அதனுடன் ஒருகிங்கிணைக்கப்பட்ட பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் 5 நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாகச் சென்று வர 12 மீட்டர் அகலம் கொண்ட நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நகரும் படிகட்டுகள், நடைமேடைகள், முக்கிய நுழைவாயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், அப்பகுதி மக்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தை, தென் சென்னையின் முக்கிய முனையமாக மாற்றவும், இவ்வழியாகச் செல்லும் விரைவு ரயில்கள் 2 நிமிடங்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
With the arrival of the flying train service, there has been a demand for express trains to stop at Parangimalai, which has become a railway terminal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.