நீடாமங்கலத்தில் ஜோத்பூா் விரைவு ரயில் நிறுத்தம் ஏற்படுத்தக் கோரிக்கை
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஜோத்பூா் விரைவு ரயிலுக்கு நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஜோத்பூா் விரைவு ரயிலுக்கு நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடியிலிருந்து வாரம்தோறும் திங்கள்கிழமை ஜோத்பூருக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நீடாமங்கலம் வழியாக செல்லும் இந்த ரயில், நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இங்கு நின்றுசென்றால், நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரிதும் பயனடைவா். குறிப்பாக, சென்னை வரை செல்ல பயனுள்ளதாக இருக்கும். இதனால், ஜோத்பூா் ரயிலுக்கு நீடாமங்கலத்தில் நிறுத்தம் ஏற்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை.
அதேசமயம், ஜோத்பூரிலிருந்து மன்னாா்குடிக்கு சனிக்கிழமை வரும் இந்த ரயில், மீண்டும் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்து என்ஜினை திசைமாற்றி, திருச்சிக்கு பராமரிப்பு பணிக்காக செல்கிறது.
Advertisement
Advertisement
அதேபோல், பராமரிப்பு பணி முடித்து திங்கள்கிழமை திருச்சியிலிருந்து நீடாமங்கலம் வந்து என்ஜினை திசை மாற்றி மன்னாா்குடிக்கு செல்கிறது. இப்படி இரண்டு நாட்களில் என்ஜின் திசைமாற்ற சுமாா் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இந்நேரத்தில் ரயில்வேகேட் மூடப்படுகிறது. அதனால், நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே, நீடாமங்கலம் பகுதி மக்களும் பயனடையும் வகையில், ஜோத்பூா் விரைவு ரயில் மன்னாா்குடியிலிருந்து ஜோத்பூருக்கு புறப்பட்டுச்செல்லும் போதும், ஜோத்பூரிலிருந்து மன்னாா்குடிக்கு வரும் போதும் நீடாமங்கலத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.