கடந்த மார்ச் மாதம் ஏர் இந்தியா விமான நிலைய அதிகாரியை சிவசேனா எம் பி ரவீந்திர கெய்க்வாட் தாக்கிய விவகாரத்தில், எம் பி யின் செயலைக் கண்டித்து, இந்தியாவில் எந்த விமானத்திலும் இனி பயணம் செய்ய முடியாதபடி அவருக்கு ஏர் இந்தியா நிர்வாக மேலாண்மை இயக்குனர் அஸ்வனி லொகானியால் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து, இன்று மக்களைவை விவாத நேரத்தில் விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் கஜபதி ராஜூவுக்கும் சிவ சேனா எம் பி க்களும் இடையே கார சாரமான விவாதம் நடைபெற்றது.
விமானப் போக்குவரத்து துறை அமைச்சரான கஜபதி ராஜூ ‘எத்தனை முறை, எப்படி விவாதித்தாலும், சிவ சேனா எம் பி கெய்க்வாடின் செயலை நியாயப்படுத்த முடியாது. கெய்க்வாட் விமான நிலைய ஊழியரைத் தாக்கியதற்காக மக்களவையில் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லா விட்டால் பொதுமக்கள் மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கும் இவ்விவகாரத்தில் ஏர் இந்தியா எடுத்துள்ள தடை உத்தரவு முடிவை திரும்பப் பெற முடியாது’ எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பதிலால் ஆக்ரோஷமான சிவசேனா எம் பிக்கள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டு ‘ தடையை நீக்கா விட்டால் மும்பையின் மேல் எந்த விமானமும் பறக்க இயலாமல் செய்து விடுவோம்’ என காட்டமாகக் கோஷம் எழுப்பியவாறு தங்களது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர். நிலவரம் கலவரமாக மாறும் முன் பிற பாஜக எம்பிக்கள் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூவை சூழ்ந்து பாதுகாப்பு தரவே, அமைதியான முறையில் இப்பிரச்சினையை விவாதிக்கக் கோரிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் வேண்டுகோளுக்கு இணங்கி சர்ச்சைக்குரிய விவாதம் தற்காலிகமாக அமைதியில் முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.