வாரணாசி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறவை மோதியதால் பயணத்தில் தடை!
பயணிகள் அனைவரும் முன்னதாகத் திட்டமிட்டிருந்தபடி செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் வாரணாசி விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
150 பயணிகளுடன் புது டெல்லிக்குப் பறக்கவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுதளத்திலிருந்து மேலேறும் போது பறவை மோதியதால் விமானத்தில் வலது எஞ்சினின் மூன்று பிளேடுகளில் ஒன்று சேதமடைந்து விமானம் பறப்பதற்கு தகுதியற்றதாக ஆனது. இதனால் பயணிகள் அனைவரும் முன்னதாகத் திட்டமிட்டிருந்தபடி செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் வாரணாசி விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். பறவை மோதி விமானத்தின் வலது எஞ்சினின் பிளேடுகளில் ஒன்று சேதமுற்ற நிலையில் புது டெல்லி- கஜூரஹோ- வாரணாசி- புது டெல்லி எனும் பயண இலக்குடைய 9W 2423 எனும் பெயருள்ள அவ்விமானத்தை இயக்க முடியாது என அவ்விமானத்தின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த விமானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பயணிகள் நிறைந்திருந்தனர். 100 பயணிகள் வாரணாசியில் விமானமேற இருந்தனர் முன்னதாக காஜூரஹோவில் ஏறிய பயணிகள் 50 பேர் புது டெல்லி செல்வதற்காக விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர்.
இவர்களில் புது டெல்லியில் இறங்கி வேறு வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக வேறு விமானங்கள் டிக்கெட் பதிவு செய்தவர்களும் அடக்கம். தற்போது விமானம் சேதமுற்று பயணம் தடைபட்ட நிலையில் விமான நிறுவனத்திடமிருந்து வரும் பதில்கள் பயணிகளைத் திருப்திப் படுத்துவதாக இல்லை எனத் தெரிகிறது. வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் மீண்டும் எப்போது விமானம் தயாராகும்? தங்களது காத்திருப்பு இன்னும் எத்தனை மணி நேரங்கள் என்பன போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள சம்மந்தப்பட்ட விமான நிறுவனத்தைக் தொடர்பு கொண்டதில் அவர்களுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கவில்லை.
Advertisement
காத்திருக்கும் பயணிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தினர் தங்களது தலைமை அலுவலகத்தின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
இன்றே பயணிகள் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றடைய முடியுமா? என்பது குறித்து தகவல்கள் இல்லை. இப்போதைக்கு வாரணாசி விமான நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு நீடிக்கிறது.