இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை தில்லி போலீஸார் இரவு கைது செய்தனர்.
கடந்த வாரம் தில்லியில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தில்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் தன்னிடம் பணம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த தில்லி போலீஸார் தினரனிடம் நேரில் ஆஜராகும் படி சம்மன் அளித்தனர்.
சம்மனை பெற்ற தினகரன் கடந்த நான்கு நாட்களாக 37 மணி நேரம் தில்லி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பர் மல்லிகார்ஜுனனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினகரனின் பதில் திருப்தி அளிக்காத நிலையில் தில்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர்.