முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு இந்தியர் சுட்டுக் கொலை! நிறவெறி தான் காரணமா?

கொல்லப்பட்ட இந்தியர் ஹர்னிஷ் படேலின் ஸ்டோர் லங்காஸ்டர் நகரின் ஷெரீஃப் அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கிறது. படேலின் ஸ்டோருக்கு பொருட்களை வாங்க செரீஃபின் உதவியாளர்கள் 

Updated On : 4 மார்ச், 2017 at 12:52 PM
பகிர்:

இந்தியாவைச் சேர்ந்த மென்பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்க நிறவெறிக்குப் பலியாக ஒரு வாரம் கடப்பதற்குள் கடந்த வியாழனன்று இரவு மீண்டும் ஒரு இந்தியர் அமெரிக்காவின் லன்காஸ்டர் நகரில் தான் நடத்தி வந்த கடையின் அருகில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். ஹர்னிஷ் படேலுக்கு மனைவியும், தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தையும் உள்ளனர். ஸ்ரீனிவாஸ் மரணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘ கெட்ட சக்தியை வெறுக்கிறோம்’ எனப் பொருள் படும் படி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதை அடுத்த இரண்டே தினங்களில் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதை வைத்து இதற்கும் அமெரிக்கர்களின் நிறவெறி தான் காரணமாக இருக்குமோ என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுகின்றனர்.

கொல்லப்பட்ட இந்தியர் ஹர்னிஷ் படேலின் ஸ்டோர் லங்காஸ்டர் நகரின் ஷெரீஃப் அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கிறது. படேலின் ஸ்டோருக்கு பொருட்களை வாங்க செரீஃபின் உதவியாளர்கள் அடிக்கடி கடைக்கு வருவதுண்டு. அப்பகுதி மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதியாகவே இருந்து வந்த நிலையில் படேல் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் அந்தப் பகுதி மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. படேல் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது மனைவியும், குழந்தையும் வீட்டில் இருந்தனர். திடீரென துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டு ஷெரீஃப் அலுவலகத்தில் இருந்து செரீஃபின் உதவியாளர்கள் ஓடி வந்து பார்க்கும் போது படேல் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். என WOCTV     எனும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.

படேல் குறித்து அப்பகுதி மக்கள் பகிர்ந்து கொண்ட செய்தி; படேல் பிறருக்கு உதவும் குணம் கொண்ட,  மிகவும் அமைதியான மனிதர். தனது குடும்பத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவர். தனது கடைக்குப் பொருள் வாங்க வருபவர்கள் பணம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உணவிட்டு அனுப்பும் அளவுக்கு பெருந்தன்மையான குணம் கொண்டவர். அவருக்கு இங்கே எதிரிகள் யாரும் இல்லை. படேல் கொலைக்கு நிறவெறி காரணமாக இருக்கும் என நம்ப முடியவில்லை. என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement

எது எப்படியோ அமெரிக்காவில் வாரம் தவறாது இரு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த அமெரிக்க வாழ் இந்தியர்களிடையேயும் பதட்டம் நிலவுகிறது. அமெரிக்காவில் வாழ இந்தியர்களுக்கு உரிமையும், பாதுகாப்பும் இல்லாத நிலை நீடிப்பதை அங்கிருக்கும் இந்தியர்கள் விரும்பவில்லை. இதற்கு டிரம்ப் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என மொத்த இந்தியர்களும் உற்றுக் கவனித்து வருகின்றனர்.

Image Courtsy: WBTV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.